பைக் விபத்தில் இருவர் பலி

நாங்குநேரி, மே 21:  நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் கீழூரைச் சேர்ந்தவர் பூல்பாண்டி என்கிற கொடிபாண்டி (50). விவசாயியான இவர், மூலைக்கரைப்பட்டி அடுத்த செண்பகராமநல்லூரில் நடந்த உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றார். செண்பகராமநல்லூரில் செல்லும்போது நிலை தடுமாறி அங்குள்ள வீட்டுச் சுவற்றில் மோதியதில் பூல்பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூல்பாண்டி இறந்தார். மற்றொரு சம்பவம்: மூலைக்கரைப்பட்டி அடுத்த லெத்திகுளத்தை சேர்ந்தவர்  சுப்பையா(60). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், நேற்று அம்பலம் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது ஆயர்குளத்தை சேர்ந்த பூ வியாபாரி கொம்பையா(40) என்பவர் ஓட்டிவந்த பைக் சுப்பையா மீது மோதியது. இதில் சுப்பையா மற்றும் கொம்பையா இருவரும் கீேழ விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுப்பையா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கொம்பையா, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரு விபத்துகள் குறித்து மூலைக்கரைப்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: