சத்தியமங்கலம், மே 19: சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பிரிவு காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (எ) ரங்கன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு லட்சுமி (25) என்ற மனைவியும், புனிதா என்ற மகளும், சபரி வாசன் என்ற மகனும் உள்ளனர். லட்சுமி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் தினசரி கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு லட்சுமி வேலைக்கு சென்று விட்டு இரவு 8 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் ஏறி சிக்கரசம்பாளையம் பிரிவில் வந்து இறங்கி வீட்டிற்கு செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நபர்கள் லட்சுமியை பிடித்து திடீரென கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு கத்தியை வீசி விட்டு தப்பி சென்றனர். கழுத்தில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.