திருச்செங்கோடு, மே 19: தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிட்டு வருகிறது.2018 நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக இணைவு பெற்ற 30 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் 89.59 சதவீத தேர்ச்சி பெற்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. அடுத்த நான்கு இடங்கள் பெற்ற கல்லூரிகள் வருமாறு: கோவை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி (65.87 ), ஈரோடு பண்ணாரியம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (83.37), விருதுநகர் மெப்கோ பொறியியல் கல்லூரி( 82.65), தூத்துக்குடி நேசனல் பொறியியல் கல்லூரி (82.52) அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 481 பொறியியல் கல்லூரிகளில் நவம்பர் டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் அடிப்படையில் விவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 81.65 சத தேர்ச்சியைப் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளது. 88.12 சதம் பெற்ற சேலம் கைத்தறி தொழில் நுட்பக் கல்லூரி முதலிடத்தையும், 85.57 சத தேர்ச்சி பெற்று கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரி இரண்டமிடமும் பெற்றுள்ளன.78.14 சதம் பெற்ற சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரி நான்காமிடத்தையும், சென்னை ஆர்எம்டி பொறியியல் கல்லூரி 76.91 சத தேர்ச்சி பெற்று ஐந்தாமிடத்தையும் பிடித்தன.