பெரம்பலூர், மே 17: அடிக்கல் நாட்டி 367 நாட்களான நிலையில் சிறுவாச்சூர் தரைவழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் உயிர்ப்பலி ஏற்படும் முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ரூ.13.03 கோடி மதிப்பில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு மே 14ம் தேதி நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் சங்கரசுப்ரமணியன், பெரம்பலூர் எம்பி மருதராஜா, கலெக்டர் சாந்தா முன்னிலையில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறுவாச்சூர் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, நாட்டின் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 80 சதவீத போக்குவரத்தும், மொத்த சரக்கு போக்குவரத்தில் 65 சதவீத சரக்கு போக்குவரத்தும் 2 சதவீத தேசிய நெடுஞ்சாலையில் தான் நடந்து வருகிறது. இந்த சாலை வசதியை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்பதே இந்த துறையின் கேபினட் அமைச்சர் நிதின் கட்கரிக்கு பிரதமர் மோடி அறிவித்த இலக்காகும். அதோடு தேசிய நெடுஞ்சாலையின் தரத்தை உயர்த்த வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.