திருத்தணி: திருத்தணி, பீரகுப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்று வழங்கிடக் கோரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் குவிந்தனர். கோட்டாட்சியர் இல்லாததால் அவர்களது மனுவை தாசில்தார் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். திருத்தணி பீரகுப்பம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்ததி மக்கள் வசிக்கின்றனர். இந்த வகுப்பை சேர்ந்த மக்களுக்கு ஆதிதிராவிடர் சாதி சான்று வழங்க வேண்டி கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்து இருந்தனர். இந்நிலையில் இதற்கான உரிய ஆதாரங்கள் ஒப்படைக்கவில்லை என்று கூறி இவர்களது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பீரகுப்பம் கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் திருத்தணியில் கோட்டாட்சியார் அலுவலகத்தில் தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் வழக்கறிஞர் மு.சு. திருநாவுக்கரசு தலைமையில் நேற்று கோரிக்கை மனுக்களுடன் குவிந்தனர்.