தொட்டபெட்டா பூங்காவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி, மே 15: ஊட்டி தொட்டபெட்டா அருகே அமைந்துள்ள தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா அருகே தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தேயிலை பூங்கா உள்ளது. இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் நடுவே நடை பயணம் மேற்கொள்ளும் போது தேயிலையின் வரலாற்றை அறியும் வகையில் தகவல் பலகைகள், பூங்காகவை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் கொண்ட சிறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் தேயிலை தூள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் மாதிரிகளும் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமாகாத நிலையில் தேயிலை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை மற்ற சமயங்களில் குறைவாகவே இருக்கும். தற்போது கோடை சீசன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடுவது மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள பைக்காரா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தளங்களையும் பார்த்து ரசிக்கின்றனர். இதேபோல் தேயிலை பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நடைபயணம் மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

இதனால் தேயிலை பூங்கா களை கட்டி காணப்படுகிறது.

Related Stories: