தூத்துக்குடி,மே 15: ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கு கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் துவங்கியது. தூத்துக்குடி பகுதியின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, இளைஞர்கள் நலன் மற்றும் மாணவர்களின் திறன் வளர்ப்பு, கல்வி போன்றவற்றிற்காக வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு, சீதா திறன் வளர்ப்பு மையத்துடன் இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக அடிப்படை கம்ப்யூட்டர் மற்றும் டேலி ஆகிய பயிற்சிகளை அளிக்க இருக்கிறது. இந்த கோடைகால விடுமுறை பயிற்சி திட்டத்தில் சீதா திறன் வளர்ப்பு மையத்தின் மூலம் இளைஞர்களுக்கு தரமான கம்ப்யூட்டர் கல்வியை வழங்குகிறது. 30 நாட்கள் அளிக்கப்படும் இந்த பயிற்சியில் 8ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு டேலி பயிற்சியும் அளிக்கப்படுகிறது.இதற்கான துவக்க நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் இணை துணை தலைவர் சுமதி தலைமை வகித்தார். சீதா திறன் வளர்ப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி கருணாகரன் முன்னிலை வகித்தார். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன அலுவலர்கள் நிஷின், சுகந்தி செல்லதுரை, ஜெய மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த பயிற்சி முகாம் நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது.