திருச்சி, மே 15: இரண்டாம் உலக போரின்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு கரூர் மாவட்டம் நெய்தலூர் அருகே வழங்கப்பட்ட நிலத்தை திருப்பி ஒப்படைக்கப்பட உத்தரவிடப்பட்டதை கண்டித்து 82 ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திருச்சி முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நெய்தலூர் காலனியில், 1947க்கு முன்பு இரண்டாம் உலகப் போரில் ராணுவத்தில் பணிபுரிந்ததற்கு மத்திய அரசால் 355 ஏக்கர் 17 செண்ட் நிலம் வீர மானியமாக 82 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது 82 பேரும் இறந்துவிட்டனர். அவர்களது வாரிசுதாரர்கள் அந்த இடத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. கரூர் கலெக்டர் உத்தரவின் பேரில் டிஆர்ஓ திடீரென சில நாட்களுக்கு முன் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை திருப்பி ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.