காரைக்கால், மே 14: காரைக்கால் தனியார் துறைமுகம் அரசுக்கு செலுத்தும் வருவாயில் பாதியை, காரைக்கால் மாவட்டத்துக்கே செலவு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாஜிம் கூறியது: காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு, காரைக்காலில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டது. இந்த நிதி சரியான முறையில் தரப்படுவதில்லை. காரைக்காலில் எந்தவொரு பணி செய்வதற்கும் நிதி இல்லை என்பதே பிரதானமாக உள்ளது. இந்நிலையில், காரைக்காலில் இயங்கும் தனியார் துறைமுகம், புதுச்சேரி அரசுக்கு தமது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை காலாண்டு முறையில் அளித்து வருகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. துறைமுகத்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் மக்களுக்கு அந்த நிதியில் பாதியை வழங்குவதுதான் முறையாகும்.