திருப்பூர், மே 10: திருப்பூர் குடியிருப்பு பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி துப்புரவு வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 23வது வார்டு பகுதியான ரெங்கநாதபுரம் 4வது வீதியில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியை சுற்றியுள்ள ஜெய்நகர், குமரன் காலனி, ரெங்கநாதபுரம் 3வது வீதி உள்ளிட்ட பகுதிகள் வீடுகள் நிறைந்தவை. இப்பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை ரெங்கநாதபுரம் 4வது வீதியின் கடைசியில் குவிக்கப்பட்டு மினி லாரி மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த குப்பைகளை முறையாக அள்ளாமல் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இப்பகுதியில் குப்பை அள்ளப்பட்டு 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது. துர்நாற்றம் மற்றும் ஈக்களின் தொல்லையை தாங்க முடியாத பொதுமக்கள் குப்பைகளை தாங்களாக அப்புறப்படுத்த முயன்றனர். தகவல் அறிந்து தாமதமாக அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி துப்புரவு வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.