சோமனூர், மே 10: தமிழகத்திலும், மத்தியிலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சூலுாரில் நடந்த கூட்டத்தில் பேசினார். சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து கோவை கருமத்தம்பட்டி நால்ரோட்டில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஎம்சி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ஆர்பி முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: இடைத்தேர்தல் நடக்க கூடாது என்று அதிமுகவினர் பிரார்த்தனை செய்தனர் ஆனால் அது நடக்கவில்லை. எதிரிகளை வீழ்த்த இரண்டு தோட்டக்கள் சூலூர் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், எதிர்பார்க்கும் முடிவு கிடைக்கும். திமுகவிற்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் வரலாறு உண்டு. 1971 ம் ஆண்டு கருணாநிதி, இந்திராகாந்தி தலைமையில் முதல் கூட்டணி அமைந்தது. பிறகு ஆறு முறை நடைபெற்ற இதே கூட்டணி பெற்றி கண்டது. இந்த முறையும் வெற்றியை பெறும். பாஜக எதிர்ப்பு மாநிலத்–்தில் முதல் வரிசையில் இருப்பது தமிழகம். மோடி அரசை உறுதியோடு எதிர்கின்றோம். ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே உடை பழக்க வழக்கம், இருக்க வேண்டும் என பாஜக சவால் விடுகிறது என்றால் அதை முறியடிக்க வேண்டியது நமது கடமை. மத்தியில் நீங்கள் விரும்பும் அரசு அமையும். திமுகவும் அந்த அரசில் இருக்கும். திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டியை காங்கிரஸ் மாற்றியமைத்து புதிய வரியை கொண்டு வருவோம். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கட்சி அமைந்து மாநிலத்தில் கையாலாகாத அரசு இருந்தால் எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும்? மத்திய அரசு திட்டங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால் மத்தியில் மாற்று அரசு அமைந்தால், தமிழகத்திலும் மாற்று அரசு அமையும். விரைவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.