நாமகிரிப்பேட்டை, மே 7: நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகள், எந்த ஒரு பயிரையும் பயிரிடும் முன்பாக, மண் பரிசோதனை செய்வது அவசியம் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தங்கள் மண்ணின் தன்மையை அறியாமல், தேவைக்கு அதிகமாக உரம் இடுவதால் பயிர்களில் மகசூல் பாதிப்பதுடன், பண விரயமும் ஏற்படுகிறது. மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம், மண்ணின் கார அமில நிலை, மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மற்றும் துத்தநாகம், மாங்கனீசு, இரும்பு போன்ற நுண்ணூட்டச் சத்துகளின் அளவுகளை தெளிவாக அறிய இயலும்.