கூடலூர், மே 7: கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணி ஒருவரின் காரை காட்டு யானை சேதப்படுத்தியது. கூடலூர் - மைசூர் சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதி முதுமலை புலிகள் காப்பக எல்லைப் பகுதியாக உள்ளது. இரவு 9 மணி முதல் இந்த சாலை மூடப்படுவதால், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தொரப்பள்ளி பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இரவு நேரத்தில் தொரப்பள்ளி பகுதிக்குள் வந்து செல்வது வாடிக்கையாக நடக்கும். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது ஒற்றை யானை ஒன்று முதுமலை வனப்பகுதியில் இருந்து தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் நடமாடி வருகிறது.