கோவை, மே 7: கோவை அடுத்த துடியலூரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் அவரது பாட்டியை கொலை செய்திருக்கலாம் என மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட எஸ்.பியிடம் நேற்று புகார் அளித்தனர்.இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா எஸ்.பி சுஜித்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை அடுத்த துடியலூரில் கடந்த மார்ச் மாதம் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீசார் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இதில் சம்பவம் நடந்த தேதியில் சந்தோஷ்குமார் அவரது பாட்டி அய்யம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அய்யம்மாள் நல்ல உடல் நிலையுடன் இருந்துள்ளார். ஆனால் அன்றைய இரவு அய்யம்மாள் மர்மமான முறையில் இறந்துள்ளார். பின் முக்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.