பெரம்பலூர், மே 7: இன்று ரமலான் நோன்பு துவங்கவுள்ள நிலையில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசால் வழங்கப்படும் பச்சரிசியை இன்னும் வழங்காததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் தாலுகாவில் 14 பள்ளிவாசல், வேப்பந்தட்டை தாலுகாவில் 23 பள்ளிவாசல், குன்னம் தாலுகாவில் 5 பள்ளிவாசல், ஆலத்தூர் தாலுகாவில் 7 பள்ளிவாசல் என மொத்தம் 49 பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் நோன்பு தயாரிப்பதற்கான பச்சரிசி வழங்கப்படும். 2019ம் ஆண்டுக்கு இன்று (7ம் தேதி) புனித ரமலான் நோன்பு துவங்கும் நிலையில் நேற்று வரை பச்சரிசி வழங்கவில்லை.
இதையடுத்து நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 49 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளான முத்தவல்லிகள், நாட்டாமைகள் 60க்கும் மேற்பட்டோர் திரண்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அங்கு பள்ளிவாசல்களின் நிர்வாகிகளான வாலிகண்டபுரம் சபியுல்லா, தேவையூர் அக்பர், ரஞ்சன்குடி முகமதுகலில், சத்திரமனை லியாகத் அலி, குரும்பலூர் ஜவாஹிருல்லா, லப்பைக்கு டிகாடு சர்புதீன், டி.களத்தூர் குலாப்ஜான், பெரம்பலூர் மக்காபள்ளி சாகுல்ஹமீது, நூர்பள்ளி அபுஹனிபா என 60க்கும் மேற்பட்டோர் வழங்கல்துறை அலுவலர்களிடம் கேட்டனர்.