கோவை, மே 1:கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் ரயில்வே ஊழியர் உட்பட 3 பேர் பலியாயினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் பார்த்தமன் பகுதியை சேர்ந்தவர் வர்கமலேஸ் பிஸ்வாஸ்(38). இவர் கோவை சரவணம்பட்டி பகுதிகளில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கணபதி பகுதியில் உள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வர்கமலேஸ் பிஸ்வாஸ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை கணபதி புதூர் தவசியம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் தர்மராஜன்(55). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை டெக்டூல்ஸ் பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒண்டிப்புதூர் காமாட்சி புரத்தை சேர்ந்தவர் நாகநாதன்(35). ரயில்வே ஊழியர். சம்வத்தன்று இவர் வெள்ளலூரில் உள்ள தன்னுடைய நண்பரை பார்க்க சென்றிருந்தார். அங்கு அவர் செல்போனை சார்ஜில் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.