விளையாட்டு விடுதியில் சேர வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஏப்.28:தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்றவாறு விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு ஆகியவற்றுடன் இந்த விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வருகிற 2019-20ம் கல்வி ஆண்டில் 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் விடுதியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விடுதியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 7ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தேர்வு 10ம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

Related Stories: