நாகர்கோவில், ஏப். 28: கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எஸ்.ஐ. தலைமையில் 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் காரணமாக, தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஏடிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பார்சல்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதே போல் தமிழகத்தில் ஓடும் முக்கிய ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 5.20க்கு புறப்பட்டு, 5.35க்கு நாகர்கோவில் வந்து சேரும். பின்னர் மாலை 5.45க்கு சென்னை புறப்பட்டு செல்லும்.