செங்கம், ஏப்.26: செங்கம் பகுதிகளில் சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டிவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து ஆறு, குளம், ஏரி மற்றும் விவசாய கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், செங்கம் டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், பூமிக்கடியில் ராட்சத பைப்லைன் அமைத்து, பம்பிங் செய்து சுத்திகரிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, உடைந்த பைப்லைன் சீரமைக்கப்படாமல், பல இடங்களில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், விநியோகிக்கப்படும் குடிநீரிலும் மண் துகள்கள், கழிவுப்பொருட்கள் என மாசு கலந்து காணப்படுகிறது.