பெரம்பலூர், ஏப். 26: ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவு வகைகளின் அளவு குறைந்து மோசடி நடந்து வருவதாக வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்பதியடைந்துள்ளனர். நாகரீகம் பெருக, பெருக நமது வாழ்க்கை முறையிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தொலை தொடர்பு சுலபமாக கிடைக்காத கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க டெலிபோன் கடைகளில் கியூவில் நின்று பேசி உள்ளனர். அதுபோல் இறப்பு தகவல் அளிக்க தந்தி நடைமுறையில் இருந்தது. தற்போது கால சூழ்நிலைக்கேற்ப வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் என மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் இவை அனைத்தும் தற்போது மனிதர்களுக்கு எதிரிகளாக அமைந்துவிட்டது. அதுபோல் ஒவ்வொரு பகுதிக்கு ஏதேனும் ஒரு டிபன் கடை இருந்தது. அதுவும் சிறிய அளவில் இருந்தது. கடைகளில் சாப்பாடு வாங்குவது மற்றும் சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாக இருந்தது. தற்போது தெருவிற்கு தெருவில் 10க்கும் மேற்பட்ட டிபன் கடைகள், பாஸ்ட்புட் கடைகள் முளைத்துள்ளது. இந்த கடைகளில் டிபன் மற்றும் சாப்பாடு வாங்குவதற்கு கால் கடுக்க காத்திருந்து வாங்கி செல்லப்பட்டு வருகிறது.