திண்டுக்கல், ஏப். 25: கழிவுநீர், மருத்துவ கழிவுகள் கலப்பால் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி குளம் மாசடைந்து வருவதுடன் நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி குளம் ஒரு காலத்தில் 100 ஏக்கர் பாசன பரப்பளவு கொண்டதாகும். மேலும் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்ததுடன் கோடைகாலத்தில் மீன்பிடி திருவிழாவும் இங்கு நடக்கும். கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லாததால் தற்போது இக்குளத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சங்கமம் ஆகிறது. இதனால் குளம் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டுகின்றனர். இவற்றை உண்பதற்கு நாய்களும், பன்றிகளும் முகாமிடுகின்றன. குளத்தில் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை தூக்கம் இழக்க செய்கிறது. பூச்சிகளும், விஷஜந்துக்களும் அடிக்கடி வீட்டிற்குள் படையெடுக்கின்றன. குளத்தில் கழிவுநீர் என்று தெரியாமல் கால்நடைகள் குடிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும் தொண்டை அடைப்பான் உட்பட பல விதமான நோய்கள் பரவுகின்றன.