பெரம்பலூர், ஏப்.24: வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 1644 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி தரைதளத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், முதல் தளத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2ம் தளத்தில் முசிறி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி தரைதளத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், முதல்தளத்தில் துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2ம் தளத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்த வளாகத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதில் 3 சிப்டுகளில் காவலர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு அத்துமீறி யாரும் உள்ளே நுழைவதை தடுக்கவும், வெப் கேமராக்கள் வசதியுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் உள்ளே வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார்.