கரூர், ஏப். 24: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் கடந்த ஒரு மாதமாக விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக இருப்பதால் மக்கள் பயன்படுத்திட முடியாமல் அவதிப்படுகின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம்கரூர் பகுதிகளுக்கு வாங்கல் மற்றும் நெரூர் பகுதி காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்தும், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்தும் நீரேற்று நிலையங்களம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும், தாந்தோணிமலை பகுதியில் கடந்த 1 மாதமாக விநியோகம் செய்யப்படும் குடிநீர் மண் கலந்த நிலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பயன்படுத்திட முடியாத நிலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் இதனை பயன்படுத்திட முடியாமல் பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் மழைக்காலங்களில் மட்டுமே இதுபோல, கலங்கலாக தண்ணீர் வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வரும் நிலையிலும் குடிநீர் கலங்கலாக இருப்பதால், பல்வேறு தொற்று நோய்களால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.