திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பதிவாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரணி மக்களவை தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.இதனால், இரண்டு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அறைகளில் வைத்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் தாசில்தார் நுழைந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அனுமதியளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.