திருவள்ளூர், ஏப்.24: வேளாண்துறையின் ‘உழவன்’ செயலியில், வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய, மாநில வேளாண்துறைகள் சார்பில், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், கடந்தாண்டு, ‘உழவன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண்துறை மானியத்திட்டங்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர்காப்பீடு, உரம் மற்றும் விதை இருப்பு, வானிலை உட்பட 9 வகையான சேவைகளை விவசாயிகள் இந்த செயலியில் பெற முடியும்.இதில், மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, இந்த மொபைல் செயலிக்கு அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, மாவட்டத்துக்கான வானிலை முன்னறிவிப்பு, கோவை வேளாண் பல்கலை கழகத்திடம் பெறப்பட்டு, இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.