மயிலாடுதுறை, ஏப்.23: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா திருவாலங்காடு பகுதியில் ரயிலடித்தெரு, கன்னிகோவில் தெரு, அளவுதடி தெரு, வள்ளுவன் தெரு ஆகிய நான்கு தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மெயின்ரோட்டில் இருந்து தங்கள் தெருக்களுக்கு செல்வதற்கும், ரயில்வே லயனை ஒட்டியபடி இருக்கின்ற இடத்தை சாலையாக கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் திருவாலங்காடு பகுதியில் ரயிலடித்தெரு உட்பட 4 தெருக்களுக்கு செல்லக்கூடிய மக்கள் இந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் அந்த சாலையின் நடுவே கருங்கல்லை பதித்து சாலையை மூடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் எங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு இதுதான் வழி. இதனை அடைத்துவிட்டால் நாங்கள் எப்படி செல்ல முடியும் என்று கூறி பணியை தடுத்தனர்.