பெரம்பலூர், ஏப்.22: அரியலூர் மாவட்டத்தில் நடந்த சாதி மோதலுக்கு எதிராக பெரம்பலூர் மாவட்டத்தில் பேஸ்புக் மூலம் டிக்-டாக் பதிவிட்ட அசூர் கிராமத்தைச் சேர்ந்த இருவர் மீது குன்னம் போலீசார் வழக்குப் பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவன்று அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் பகுதிக்குச் சென்று தாக்குதல் நடத்தியது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அசூர் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் உதயகுமார் ( 22) மற்றும் இதே தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (21) இருவரும் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி சம்பவத்தை வன்முறையைத் தூண்டும் விதமாக பேஸ்புக் மூலம் டிக்-டாக் பதிவிட்டிருந்தனர்.