திருவள்ளூர், ஏப். 18: தேர்தலையொட்டி, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, தொழிலாளர் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி அறிவித்துள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் கடமையாற்ற வேண்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு, ‘’135பி’’ யின்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.