கோவை, ஏப். 17: கோவை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் அப்பாத்துரைக்கு ஆதரவாக அக்கட்சி தொண்டர்கள் டி.டி.வி.தினகரனின் முகமூடி அணிந்து வாக்குசேகரித்தனர். கோவை மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) வேட்பாளர் அப்பாத்துரை கடந்த 1ம்தேதி முதல் கோவை தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவர், நேற்று கோவை மாநகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு, பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்குசேகரித்தார். இவருக்கு ஆதரவாக, அமமுக கட்சி தொண்டர்கள், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் முகமூடி அணிந்து காட்டூர் பகுதியில் வாக்குசேகரித்தனர். மாலையில், ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரத்தில் வேட்பாளர் அப்பாத்துரை தனது பிரசாரத்தை நிறைவுசெய்தார். பின்னர், வேட்பாளர் அப்பாத்துரை நிருபர்களிடம் கூறியதாவது:கோவை தொகுதியில் இம்முறை அமமுக வெற்றிபெறும். இத்தொகுதியில், இதற்கு முன் வெற்றிபெற்றவர்கள், கோவை மாநகரின் வளர்ச்சிக்கும், கோவை மக்கள் மேம்பாட்டுக்கும் எதுவும் செய்யவில்லை. அந்த அதிருப்தி மக்களிடம் உள்ளது. எனவே, இம்முறை மக்கள் மாற்றத்தை உருவாக்க முடிவுசெய்துவிட்டனர். அதன்அடிப்படையில் அமமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதை, நான், பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் உணர முடிந்தது.