மதுரை, ஏப். 16: பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில், வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதி நிறைவேற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் வாக்குறுதி அளித்தார். மதுரை மாட்டுத்தாவணியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கட்டப்பட்ட பழ மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வியாபாரிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் ராஜ்சத்யன் கூறியதாவது: பழங்கள் மற்றும் காய்கறி வணிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதி கட்டாயம் நிறைவேற்றப்படும். வியாபாரிகளை ஒரு புள்ளியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான திருமண உதவி, மகப்பேறு உதவி, தாலிக்கு தங்கம் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.