பட்டுக்கோட்டை, ஏப். 16: பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது.கடந்த 2ம் தேதி வரை நாடியம்மன் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அன்றிரவு சிவிகாரோகண காட்சியுடன் பெரியகடை தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினார். கடந்த 2ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை காலை, மாலை வேளைகளில் நாடியம்மன் வீதியுலா நடந்தது. இதில் முக்கிய திருவிழாக்களான 7ம் தேதி நாடியம்பாள் சரஸ்வதி தரிசனத்திலும், அன்றிரவு இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி, நாடியம்பாள் செட்டித்தெருவுக்கு எழுந்தருளி அங்கு பதுமை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி புஷ்ப பல்லக்கில் நவநீத சேவை, குதிரை வாகனத்தில் வெண்ணெய்தாழி குடத்துடன் வீதியுலா நடந்தது.