துறையூர், ஏப்.12: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் துறையூர் ஒன்றிய, நகர பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான ஐஜேகே கட்சி சார்பில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று துறையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாகலாபுரம், மேலகுன்னுப்பட்டி, கீழகுன்னுப்பட்டி, புளியம்பட்டி, நடுவலூர், முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம், சொரத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எம்பியாக வெற்றிபெற்ற பிறகு உங்களுக்கு நன்றி சொல்ல வருவேன். அப்போது உங்கள் பிரச்னைகளை கேட்டறிந்து ஒன்றன்பின் ஒன்றாக முடித்து தருவேன். மேலும், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு மிகுதியாக உள்ளது. மாதம் ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. இந்தப் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இருந்தாலும் அதை முறையாக செயல்படுத்தாததால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் வந்ததும் சரி செய்வோம்.