கரூர், ஏப். 12: கரூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்வேல் நேற்று கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் கிராமம் கிராமமாக சென்று வாக்குசேகரித்தார். கொளுத்தும் வெயிலிலும் பிரசாரம் மேற்கொண்டார். பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் ஆதரவு கேட்டார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்களிடம் அவர் கூறுகையில்,அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுசெயலாளர் தினகரன் அன்பு, ஆசிபெற்ற வேட்பாளராக பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு நான் வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு பிறரைப்போல சம்பாதிப்பதற்காக வரவில்லை. கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கிறது. காவிரி அருகில் இருந்தும் இந்த நிலைமை. காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டும் நீரை சேமிக்க திட்டம் இல்லை. கடலில் வீணாக கலந்து விட்டது. நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. வாய்க்காலை தூர்வாரும் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஓட்டு மட்டும் வாங்கி விட்டு போய் விடுகிறார்கள். எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்கிறார்கள்.