பந்தலூர், ஏப்.9: நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நீலகிரி மக்களவை தொகுதி திமுக., மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ராசா நேற்று சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி, அம்பலமூலா, பிதர்காடு, குந்தலாடி, பாக்கனா, நெலாக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். முன்னதாக எருமாடு பஜாரில் திமுக.,. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு ராசாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், பெண்கள் ஆரத்தி எடுத்து ராசாவை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ராசா பேசியதாவது, நான் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது பல்வேறு பணிகளை செய்துள்ளேன். தொடர்ந்து இப்பகுதிக்கு வருகை தந்து மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுத்து வருகிறேன். உங்களின் ஒருவனாக என்றும் இருந்து சேவை செய்ய தயாராக உள்ளேன். மத்தியில் உள்ள மதவாத ஆட்சியையும் தமிழத்தில் ஆளும் பினாமி அரசையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.