சென்னை, ஏப். 9: மலேசியாவில் இருந்து சென்னைக்கு ₹18 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் நடந்த சோதனைகளை கடந்து சாமர்த்தியமாக தப்பிய அவர், மெட்ரோ ரயில் நிலையத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 11.30 மணியளவில் வந்த ஒரு வாலிபர், டி.எம்.ஸ். செல்வதற்கு டிக்கெட் எடுத்தார். பின்னர், நடைமேடைக்கு சென்றபோது, அவர் வைத்திருந்த கைப்பையை மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது, அதில் தங்கம் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதையடுத்து ரயில் நிலைய ஊழியர்கள், பையை பறிமுதல் செய்து, அந்த பயணியை தடுத்து நிறுத்தினர். பின்னர், இதுகுறித்து மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த போலீசார், அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில், 510 கிராம் எடையுள்ள 5 தங்க கட்டிகள் இருந்தன. அதன்மதிப்பு ₹18 லட்சம். விசாரணையில், அந்த வாலிபர் திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆஸ்பக் ஹாசன் (22) என்பதும், இவர், மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததும் தெரிந்தது.