விருதுநகர், ஏப். 3: விருதுநகர் அருகே, ரோசல்பட்டி ஊராட்சியில் தண்ணீர் பம்பிங் நிறுத்தப்பட்டதால், 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 30 ஆயிரம் பொதுமக்கள்
தவிக்கின்றனர். விருதுநகர் அருகே, ரோசல்பட்டி ஊராட்சி உள்ளது. முதல்நிலை ஊராட்சியான இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன; 30 ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ராஜீவ்காந்தி குடிநீர் திட்டம் மூலம் சோழக்கவுண்டன்பட்டி, வள்ளிக்குளம், நாகம்பட்டி பகுதியில் போர்வெல் அமைத்து, அங்கிருந்து தண்ணீர் எடுத்து காந்திநகர், கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், ரோசல்பட்டி, குமராபுரம், ஜக்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளுக்கு விநியோகம் செய்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால், 15 முதல் 20 நாள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், சிவகாசி ரோட்டில் உள்ள மத்தியசேனை கிணற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம், ரோசல்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் எடுக்கும் தண்ணீரை பாண்டியன் நகர், முத்தால் நகர், அண்ணா நகர், மல்லிக்கிட்டங்கி ஆகிய பகுதிகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்கின்றனர். ஆனால், இந்த தண்ணீர் குடிக்க உகந்ததாக இல்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக ஒரு குடம் குடிநீர் ரூ.10 முதல் ரூ.12 வரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.