முத்துப்பேட்டை மார்ச்28: முத்துப்பேட்டையில் 8 ஆண்டுகளாக செயல்படாத உழவர்சந்தை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என மக்கள் , விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை குமரன் கடைதெரு அருகே பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை வியாழன் தோறும் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட உழவர்சந்தையும் உள்ளது. இதனை திருவாரூரில் உள்ள வேளாண் விற்பனைக்குழு நிர்வகித்து வருகிறது. கிராம பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பணப்பயிர்கள், கீரை ,காய்கறிகள் ஆகியவற்றை இடைதரகர்களின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக இந்த சந்தை திறக்கப்பட்டது. தினசரி இயங்கும் வகையில் திறக்கப்பட்ட இந்த உழவர்சந்தையால் இப்பகுதியினர்பெரும் அளவில் பயனடைந்தனர்.இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளும், தேங்காய், கிழங்கு, பழவகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்,கருவாடுகளும் இங்கு விற்பனைக்கு வந்தன. குறைந்த விலை சரியான எடையளவுடன் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. வியாபாரிகள் பயனுக்காக மின்னணு தராசுகள் எடைக்கற்கள் ஆகியனவும் உழவர்சந்தை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. உழவர்சந்தையால் விவசாயிகளும் பொதுமக்களும் ஒருசேர பயனடைந்தனர். சந்தைக்கு காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுவர இலவச பஸ் சேவையும் அமல்படுத்தபட்டது. வாரம் ஒருமுறை வாரச்சந்தை வந்து திரும்பியவர்கள் உழவர்சந்தைக்கு தினமும் வந்து ப்ரஷ் ஆக காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் பேரூராட்சி நிர் வாகத்தால் இயங்கி வந்த வாரச் சந்தை கூட்டம் குறைந்து வெறிச்சோடியது. வெளியூரில் இருந்து வாரம் தோறும் வரும் வியாபாரிகள் தங்களது வியாபாரம் படிப்படியாக குறைந்து போனதால் உழவர்சந்தையின் மீது ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் இடைதரகர்களும் வெளியூர்வியாபாரிகளும் சந்தை வியாபாரத்தில் ஊடுருவியதால் உழவர்சந்தை நாளடைவில் மூடப்பட்டது. இதனால் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் விற்பனைக்குழு நிர்வாகிகள் உழவர்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக கூறி விவசாயிகளை அழைத்து கருத்தரங்கம் நடத்தி அடையாள அட்டைகள் ஆலோசனைகள் வழங்கினர். அன்றோடு அந்த நிகழ்வு முடிந்தது.இதனால் சுமார்எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் உழவர்சந்தையில் உள்ள கடைகள் கட்டடங்கள், கழிப்பிடங்கள் சிதிலமடைந்து வீணாகி வருவதுடன் கட்டிடங்களிலும் சந்தைவளாகம் முழுவதும் புல்புதர்மண்டிகிடக்கிறது.