பழநி, மார்ச் 28: சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரத்தால் ஓவியர்களின் வாழ்க்கை வண்ணமயமாக மாறி வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 20 நாட்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. காரணம் எந்த முறையும் இல்லாத அளவிற்கு இம்முறை தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுதான். இதனால் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தலுக்காக செய்யப்படும் விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் விதித்த கெடுபிடிகளால் பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் கையை பிசையும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பிளக்ஸ் போர்டுகளோ, கொடிகளோ தனியார் இடங்களில்கூட கட்டக்கூடாது என்ற விதிமுறையால் நகர்ப்பகுதிகளில் தேர்தலுக்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ஊராட்சிகளில் மட்டும் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று விளம்பரம் வரைந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் விதிமுறையை தளர்த்தியது. இதன்படி பிளக்ஸ் போர்டு வருகையால் வாழ்க்கையை தொலைத்து அவதிப்பட்டு வந்த ஓவியக்கலைஞர்களின் வாழ்க்கையில் தற்போது மீண்டும் ஒளி ஏற்றப்பட்டுள்ளது.