மணமேல்குடி, மார்ச் 27: ஜெகதாப்பட்டினம் அருகே கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பீடி சுருட்டும் இலை மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு ஒருசில மீனவர்களால் பீடி சுருட்டும் இலை, பீடி, சிகரெட், கஞ்சா போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இலங்கையில் இருந்து தமிழக கடற்பகுதிக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. கடத்தலை தடுக்க கடற்கரை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார், சுங்கத்துறை, கடற்படை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறையினர் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பொருட்களை கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.