ஊட்டி, மார்ச் 21: நீலகிரி தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி தொகுதிக்கான செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கணக்குகுழு, உதவி செலவின பார்வையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உதவி செலவின பார்வையாளர்கள் அனைத்து குழுக்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும், வேட்பாளர்களின் செலவு கணக்குகளை பதிவு செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மீடியா கண்காணிப்பு குழு, கட்டுபாட்டு அறை ஆகியவற்றை செலவின பார்வையாளர் கிப்கென் இன்று (நேற்று) பார்வையிட்டார். 1950 என்ற எண் செயல்பாடு, தேர்தல் ஆணைய செயலியான சி.விஜில் மூலம் பெறப்படும் புகார்களை கையாளுவது, அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ்., செயல்படும் வீதம் போன்றவற்றை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.