ஊட்டி, மார்ச் 21:அமமுக., நிர்வாகி பங்கில் நகராட்சி குப்பை லாரிகள் டீசல் போட விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் மூன்று நாட்களுக்கு பின், ேநற்று முதல் குப்பை லாரிகள் இயங்கின. ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் நகராட்சியில் உள்ள மினி லாரிகள் மற்றும் லாரிகள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பங்களில் டீசல் நிரப்பி வந்தன. இந்த பங்க் முன்னாள் அதிமுக., பிரமுகர் மற்றும் முன்னாள் நகராட்சி துணை தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமானது. நகராட்சி நிர்வாகம் லாரிகளுக்கு நிரப்பப்படும் டீசல் பணம் மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கி வந்துள்ளது. அந்த பங்க் உரிமையாளர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர். இதனால், எவ்வித பிரச்னையும் எழவில்லை. . இந்நிலையில், சம்பந்தப்பட்ட பங்க் உரிமையாளர் கடந்த சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுக.,வில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி, ஊட்டி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பங்கில் நகராட்சி லாரிகள் மற்றும் அதிகாரிகள் வாகனங்கள் டீசல் நிரப்பக் கூடாது என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அந்த பங்கில் நகராட்சி வாகனங்கள் டீசல் நிரப்ப செல்லவில்லை. இதனால், போதிய டீசல் இன்றி நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் அள்ளுவதற்கு செல்ல முடியாமல் மினி லாரிகள் நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.