கரூர், மார்ச் 21: கந்துவட்டிக்கொடுமை காரணமாக குடும்பத்துடன் கரூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற டூவீலர் மெக்கானிக்கால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(40). தற்போது கரூர் மாவட்டம், பெரியவடுகபட்டி பகுதியில் வசிக்கிறார். டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வரும் இவர் குடும்ப செலவுக்காக ரூ.45 ஆயிரம் கந்துவட்டிக்கு வாங்கினார். பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள் போனிலும், நேரிலும் வந்து மிரட்டல் விடுத்ததால் மனம் வெறுத்த அந்தோணிராஜ் நேற்று தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். கையில் மண்ணெண்ணெய் கேன் ஒன்றை வைத்திருந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடம் அருகே வந்ததும் கேனில் இருந்த மண்ணெண்ணைைய தன் மீது ஊற்றிக்கொண்டு மனைவி குழந்தைகள் மீதும் ஊற்றினார். தீவைக்க முயன்றபோது அவர் சத்தம் போட்டதை கேட்ட போலீசார் விரைந்து வந்து தடுத்தனர். அனைவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணக்காக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.