ஆரணி, மார்ச் 21: ஆரணி நகர காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் இருந்து மணல் கடத்தல் நடைபெறுவதை கண்டுகொள்ளாத காவல்துறையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கமண்டல நாக நதி மற்றும் செய்யாற்றுப்படுகை ஆகிய ஆறுகளில் இருந்து தினந்தோறும் இரவு, பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கடத்தும் மாபியாக்கள் மற்றும் வாகனங்கள் மீது போலீசார், வருவாய்த் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில் கண்துடைப்பிற்காக ஒரு சில வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்கின்றனர். அந்த வாகனங்கள் ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் கொண்டுவந்து விடுகின்றனர்.