அரியலூர், மார்ச் 20: அனைத்து கோயில்களிலும் சிலைகள் பாதுகாப்பு பெட்டகம் கட்டுவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் சிவன் கோயிலில் உற்சவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி அம்பாள் மற்றும் 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஜம்பொன் சிலைகள் மற்றும் கற்சிலைகள் உள்ளன. இந்த கோயிலில் நேற்று மாலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார். அப்போது தன்னிடம் உள்ள பதிவேடுகளின்படி கோயிலில் ஜம்பொன் சிலைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து கோயிலில் உள்ள பழங்கால கற்சிலைகளை பார்வையிட்டார். பின்னர் கோயில் அர்ச்சகர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் கற்சிலைகளாக இருந்தாலும் அவற்றின் தொன்மையை பொருத்து அச்சிலைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் விலை மதிப்பற்றவை. எனவே கற்சிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.