தோகைமலை, மார்ச் 20: தோகைமலை அருகே கள்ளை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு எருமை கிடாய்களை வெட்டி வழிபாடு செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளையில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டுக்கான திருவிழாவின் முதல் நாள் காளியம்மனுக்கு பூப்போடுதல், கரகம் பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை தொடர்ந்து கருப்பசாமி குட்டி குடித்தல், தேவராட்டம், கரகாட்டம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பின்னர் கள்ளை காளியம்மன் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி பகவதி அம்மன் முத்து பல்லக்கிலும், கருப்பசாமி குதிரை வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். அப்போது வாண வேடிக்கை மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.