கரூர், மார்ச் 20: கரூரில் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் விற்பனை சக்கைபோடுபோடுகிறது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிககும் பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. கல்வி நிலையங்கள் அருகே விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. எனினும் கரூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. தமிழக அளவில் குட்கா விவகாரம் சூடுபிடித்து தொடர்ந்து ரெய்டுகள் நடைபெற்றன. ஆனாலும் கரூர் பகுதியில் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி விற்பனை செய்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரூ.41 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 இடங்களில் குடோன்களில் பதுக்கி விற்பனை செய்துள்ளனர். வெள்ளக்கவுண்டன் நகரில் 2545 கிலோ, ராயனூர் அண்ணா நகரில் 2940 கிலோ, ஒத்தையூரில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் 150 கிலோ என 3 இடங்களில் இவைகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கரூரில் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் விற்பனை குறையவில்லை. முன்பு பாக்கெட் ரூ.20க்கு விற்பனையானது தற்போது இருமடங்காக விலை உயர்ந்து ரூ.40க்கு விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குட்கா விவகாரம் தொடர்பாக பல்வேறு ரெய்டுகள் நடைபெற்றும் கரூர் மாவட்டத்தில் விற்பனையை தொடர்ந்து கொண்டிருந்தனர். தினமும் பொது இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை பார்த்தாலே அதில் ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். குட்கா விவகாரத்தை கரூர் மாவட்ட போலீசாரோ, உளவுத்துறையோ கண்டுபிடிக்கவில்லை.