பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இதனால் கடைசி தேர்வை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் உள்ளனர். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு தேர்வுத்துறை இயக்குநகரத்தின் மூலம் பிளஸ்2 மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்த தேர்வை 40 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, 16 சுயநிதி மற்றும் 16 மெட்ரிக் பள்ளிகள் என 77 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 4,233 மாணவர்கள், 4,304 மாணவிகள் என மொத்தம் 8,537 பேர் இந்த பொதுத்தேர்வை 32 மையங்களில் எழுதவும், தனித்தேர்வர்கள் 60 பேர் பிரத்தியேகமாக ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுதவும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட 60 பேர் கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்கள் நடக்கிறதா என்று கண்காணித்து சோதனை யிட்டனர். தேர்வு மையங்களில் 33 முதன்மை கண்காணிப்பாளர்கள், 33 துறை அலுவலர்கள், 425 அறை கண்காணிப்பாளர்கள், 5 கூடுதல் துறை அலுவலர்கள் தேர்வு மைய பணிகளை மேற்கொண்டனர்.