சிவகங்கை, மார்ச் 19: திருப்புவனம் அருகே போலி நகைகளை அடகு வைத்ததாக நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். திருப்புவனம் அருகே லாடனேந்தலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் லாடனேந்தலை சேர்ந்த செந்தில்குமார்(47) நகை மதிப்பீட்டாளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 2016 முதல் 2018 வரை 19 பேரின் பெயரில் போலி நகைகளை தங்கம் என்று கூறி அடமானமாக வைத்து ரூ.36 லட்சத்து 52 ஆயிரத்தை கடன் வழங்கியுள்ளார். இந்த வங்கியில் உள்ள நகைகளை வேறு கிளைகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை வரவழைத்து பரிசோதனை செய்வர். இதுபோல் மதுரை அவனியாபுரம் வங்கி கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் கதிரேசன் இங்குள்ள நகைகளை பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அவரும் போலி நகைகள் குறித்து வங்கி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை.