திருச்சி, மார்ச் 15: உலக சிறுநீரக தினமான மார்ச் 14ம் தேதி ஆண்டுதோறும் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நேற்று (14ம் தேதி) சிறுநீரக நோய்கள் தடுப்புமுறை மற்றும் ஆரம்பநிலை சிகிச்சைக்கான முகாம் பிரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் சிறுநீரக பாதிப்புகளான சிறுநீரில் புரதசத்து கசிவு, ரத்த டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான ஆலோசனை, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்து சிறுநீர் போவது, சிறுநீரில் கிருமித்தொற்று, சீறுநீரக கல் தொந்தரவு, கட்டுப்பாடின்றி சிறுநீர் கசிவு, சீறுநீரகப்புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.