காளையார்கோவில், மார்ச் 12: காளையார்கோவில் அருகில் உள்ள நற்புதம் கிராமத்தில் புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் அருகில் சூசையப்பர்பட்டிணம், நற்புதம், குறுந்தனி ஆகிய கிராமங்களில் 650க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. மூன்று கிராமத்தினருக்கும் ஒரு ரேஷன் கடைதான் உள்ளது. இதில் நற்புதம், குறுந்தனி கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூசையப்பர்பட்டிணம் கிராமத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு பொருட்கள் வாங்க வந்து செல்லும் பெண்களுக்கு வழியில் வழிப்பறிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்குத் தனியாகச் செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்.